மாணிக்கவாசகர் திருவாசக சிந்தனைகள் 2

Standard

மாணிக்கவாசகர் திருவாசக சிந்தனைகள் 2

அண்டப்பகுதியின் உயிர்நாடியாகவுள்ள ஒன்றை பாடலில் காணப்பெறும் முன்னும் பின்னுமாகிய சில அடிகளைக் ‘கொணடுகூட்டுச்‘ செய்தவன் மூலம் ஓரளவு விளங்கிக்கொள்ள முடியும். இறைவன்,
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
மின்ஒளி கொண்ட பொன்ஒளி திகழ (124-125)
ஒளிவடிவாக விளங்குகின்றான். ஆனால் இந்த ஒளிவடிவம் திசைமுகன் தேடி முயன்றபொழுது ஒளித்துக் கொண்டது. (126). அம்மட்டோடு இல்லை, முயன்றவர்க்கு ஒளித்தும் (127), உறைப்பவர்க்கு ஒளித்தும் (129), வருந்தினர்க்கு ஒளித்தும் (130), அவ்வயின் ஒளித்தும் (132), வாள் நுதல் பெண் என ஒளித்தும் (138), உண்டு இல்லை என்ற அறிவு ஒளித்தும் (139), பற்றுமுற்று ஒளித்தும் (145) விளையாடி ஒளிக்கும் சோரன், மேலே கூறிய அத்தனை பேருக்கும் ஏன் ஒளித்துக் கொண்டான்?
ஒளிந்திருப்பவனைத் தேடிச் செல்பவரிடம் விளக்கு ஒன்று இருத்தல் இன்றியமையாதது. இத்தனைபேரிடமும், ஒளித்து நிற்கும் சோரணைக் காண ஒரு குறிப்பிட்ட ஒளி பொருந்திய விளக்குத் தேவை. அந்த விளக்கு இருந்தால், அவனை எளிதாகக் கண்டுவிடலாம். அந்த ஒளி விளக்கிற்குப் ‘பக்தி‘ என்று வடமொழியிலும் ‘இறை அன்பு‘ என்று தமிழிலும் பெயருண்டு. மேலே கூறப்பெற்றவர் அனைவரும் எத்தனையோ பெரு முயற்சிகைளைச் செய்து அவனைத் தேடமுயன்றார்களே தவிர, இந்த ஒளிவிளக்கைக் கையில் ஏந்தவில்லை. அதனாலேயே அவன் ஒளித்துக் கொண்டான்.
இத்தகையவனைப் பிடித்துக்கொள்ள ஓர் அருமையான வழியை அடிகளார் கூறியுள்ளார். நம்மால் தேடப்படும் பொருள், சித்தமும் செல்லாத தூரத்தில் (41) உள்ளது. அவனை எப்படிப் பற்றுவது? சித்தமும் செல்லாத் தூரத்தில் இருப்பவனைச் சென்று பற்றுவது என்பது இயலாத காரியம். அப்படியானால், வேறு வழியென்ன? அடுத்த அடியில் அடிகளார் தம் அனுபவத்தாற் கண்ட வழியை மிக அழகாக எடுத்து உரைக்கின்றார். நீ தேடிச் சென்றால் அவன் ஒளித்துக்கொள்வான், அன்றியும் சித்தமும் செல்லாத் தூரத்தில் உள்ளான். அவனைத் தேடிச் செல்லும் முயற்சியை விட்டுவிட்டு இருந்த இடத்திலேயே ஒரு வலையை விரிப்பாயாக. அந்த வலை ‘பக்தி‘ என்னும் ஒளிமயமான வலையாகும். அந்த ஒளி வலையை விரித்துவிட்டு அமைதியாக இருப்பாயாக. மேலே கூறிய அத்தனை பேருக்கும் ஒளித்து நின்றவன், தானே வந்து உன்னுடைய பக்தி வலைக்குள் அகப்பட்டுக் கொள்வான் (படுவோன்–42) என்று முடிக்கின்றார்.

திருச்சிற்றம்பலம்

மாணிக்கவாசகர் திருவாசக சிந்தனைகள்

Standard

மாணிக்கவாசகர் திருவாசக சிந்தனைகள்

வளர்ச்சியடைந்த மனிதன் கற்காலத்தில் தொடங்கிய தன் நிலையையும், பின்னர் பல நூற்றாண்டுகளில் தானடைந்த வளர்ச்சியையும் திரும்பிப் பார்க்கின்றான். நெருப்பை உண்டாக்குதல், உருளுகின்ற சக்கரங்கள் செய்தல், வேளாண்மை செய்தல், கூர்மையான ஆயுதங்களைச் செய்து போரிடுதல் ஆகிய பலதுறைகளில் மாபெரும் வளர்ச்சி அடைந்துவிட்டமையின், அவனுள் ஓர் அகங்காரம் தோன்றுவது இயல்பு. ஆக்கல், அழித்தல் சக்திகள் தன்பால் உள்ளன என்றும், தான் நினைத்ததைச் செய்யமுடியும் என்றும் இறுமாப்புக்கொள்ளத் தொடங்கி விட்டான். கல்வி, செல்வம் ஆகிய இரண்டும் வளர்ச்சி அடைந்தமையால், தான் முழு நிறைவு பெற்றுவிட்டதாகக் கனவு காணத் தொடங்கினான்.
மனிதனின் இந்த நிலை தொடரும்பொழுதே அவனுள் ஓர் ஐயம் தோன்றலாயிற்று. புறப்பொருள்களைக் கட்டுப்படுத்தித் தன் அதிகாரத்தின் கீழ்க் கொண்டுவரக் கற்றுக்கொண்ட அவன், தன்னுள் இருக்கும் பொறி, புலன்களையும், அவை தொழிற்படுவதற்கு ஏதுவான மனத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை அறிந்தான். எத்துணை முயன்றும் இவை அவன் அதிகாரத்தின் கீழ் வரமறுத்தன. மனத்தைக் ‘கட்டுப் படுத்தும் அக வளர்ச்சி இல்லையானால், இந்தப் புற வளர்ச்சி எந்தப் பயனையும் தாராது என்பதை நாளாவட்டத்தில் அறியத் தொடங்கினான்.
மனம் மட்டுமன்றி ஐம்பெரும் பூதங்களும் அவற்றின் ஆற்றலும் தன் அதிகார எல்லைக்குள் வரவில்லை என்பதை உணர்ந்த மனிதன், மற்றொன்றையும் கண்டு கொண்டான். தன்னுடைய புற வாழ்வை வளப்படுத்தும் இந்த ஐம்பெரும் பூதங்களும் ஒரு குறிப்பிட்ட நிலையில் அடங்கிப் பணிபுரிவதையும், வாழ்வை வளப்படுத்தும் இந்த ஐம்பெரும் பூதங்களும் ஒரு குறிப்பிட்ட நிலையில் அடங்கிப் பணிபுரிவதையும், வாழ்வை வளப்படுத்தும் இதே பூதங்கள் திடீரென்று தம் எல்லைகளை மீறிப் பேரழிவை உண்டாக்குவதையும், அவற்றின் எதிரே, தான் ஒன்றும் செய்ய இயலாது இருப்பதையும் கண்ட மனிதனுக்குப் புதிய ஆராய்ச்சி பிறந்தது.
தன் அதிகாரத்திற்கு அப்பால் புறத்தே நிற்கும் ஐம்பெரும் பூதங்களும், அகத்தே நிற்கும் ஐம்பொறிகள், புலன்கள், மனம் ஆகியனவும் தன் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டுமானால் யாருடைய துணையை நாடுவது என்ற நீண்டகாலச் சிந்தனைக்குப் பின் மனிதன் ஒரு தெளிவை அடைந்தான். அதனைத்தான் அடிகளார், ‘தெய்வம் என்போர் சித்தம் உண்டாகி முனிவிலாது ஓர் பொருளது கருதலும்’ என்று பேசுகின்றார்.
இந்த உண்மையை உணர்ந்தவுடன் அந்தத் தெய்வத்தைத் திருப்திபடுத்தித் தனக்கு உதவுமாறு செய்வதற்காக யாகங்களைச் செய்தான்; கோயில்களைக் கட்டினான்; பெரிய பெரிய நித்திய, நைமித்திய பூசைகளை நிறுவினான். பலகாலம் இதனைச் செய்தும் ஏனோ அவன் மனம் அமைதி அடையவில்லை. அப்படியானால் இத் தெய்வம் தனக்கு உதவுவதற்கு மேலும் என்ன செய்யவேண்டும் என்ற ஆராய்ச்சியில் புகுந்தான். ஐம்பெரும் பூதங்களும் இறைவனுடைய பல்வேறு வடிவங்கள் என்பதை உணரத் தொடங்கினான். அதனையே அடிகளார், ‘பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், வெளியிடை ஒன்றாய் விளைந்தாய்‘ என்று பேசுகின்றார்.
இவற்றை எல்லாம் நன்கு அறிந்த பின்னரும், மனிதனின் அறிவு வளர்ந்ததே தவிர மனத்தில் அமைதி ஏற்படவில்லை. தெய்வத்தை எப்பொழுதும் அவன் தொழத் தொடங்கினாலும் ‘தான்‘ என்ற அகங்காரமும், இத் திருக்கோயில் முதலியவை ‘தனது‘ என்ற மமகாரமும் அவனைவிட்டு நீங்கவில்லை. அவன் தொழுகை, பூசனை முதலிய அனைத்திலும் ‘நான், எனது‘ என்ற இரண்டும் தலைதூக்கி நிற்பதை உணர்ந்தான். இறைவன் திருவடிகளில் சரணமடைய வேண்டும் என்று நினைக்கும் அதே நேரத்தில், அவனுடைய மனமும் பொறிகளும் எங்கோ செல்வதைக் கண்டான்.
ஒரு தருமசங்கட நிலை ஏற்பட்டுவிட்டது. மனமும் பொறிகளும் அடங்கவேண்டுமானால் இறைவனிடம் சரணம் அடைவது தவிர வேறு வழியில்லை. அவனிடம் சரணம் அடைய வேண்டுமானால் மனம், பெறி, புலன்கள் அடங்க வேண்டும். இந்தப் போராட்டநிலை பல காலம் நீடித்த பின்னர் இறைவனைத் தொழுவதற்குக் கூட அவன் அருள் தேவை என்ற பேருண்மையை உணரத் தலைப்பட்டான். அதனையே, அடிகளார், ‘அவன் அருளாலே அவன்தான் வணங்கி‘ என்று கூறுகின்றார்.
‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்‘ என்றும் தில்லை மூதூர் ஆடிய திருவடி, பல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகி, என்றும் அடிகளார் குறித்து உள்ளாரே. அஃது உண்மையானால், அதாவது அவன் என்னுள் இருப்பது உண்மையானால் இந்தப் போராட்டம் ஏன் நிகழ்கின்றது? அவனும் உள்ளே இருக்கிறான்; இந்த மனமும் உள்ளேதான் இருக்கின்றது. அப்படி இருக்க மனம் ஏன் அவன்பால் செல்லவில்லை? மனத்தைச் செலுத்த வேண்டுமென்று நினைத்தாற்கூட அது முடியாமற் போவது ஏன் என்ற வினாத் தோன்றியவுடன், பலகாலம் சிந்தித்த மனிதன் ஓர் உண்மையைக் கண்டான். தன் உள்ளே ஒளிவடிவாய் நிற்கும் இறைவனை சித்தத்தின் மேற்பகுதி அடிப்பகுதி ஆகியவற்றைக் கடந்து, பஞ்ச லோகங்களையும் கடந்து, ஆன்மாவோடு ஒன்றி அதன் உள்ளே இருக்கின்றான். ஆதலால், இவற்றுக்கெல்லாம் வெளியே நிற்கும் மனம் எளிதாக அவனைப் பற்றிவிட முடியாது. அப்படியே அந்த மனம் முயன்றாலும் இவற்றை எல்லாம் கடந்து இறைவனை அடைய முடியாது. அப்படி அடையும் ஆற்றல் தன் மனத்திடம் இல்லை என்பதைக் கண்ட மனிதனுக்கு இறுதியாக ஒரு வழி கிடைத்தது. குறைந்த ஆற்றலுடைய தன் மனத்தை உள்ளே இருக்கும் இறைவனிடம் செலுத்துவதைவிட, அந்த இறைவனை வணங்கி, அவனே வெளியே வந்து, தன் மனத்தை அவன் எடுத்துக்கொள்ள வேண்டும். என்பதை மனிதன் கண்டான்; சுருங்கக் கூறினால் மனம் அவனை வணங்கக்கூட அவன்தான் அருள்செய்ய வேண்டும். என்பதைக் கண்டான். இதனைத்தான் அடிகளார் இரத்தினச் சுருக்கமாக, உபநிடத வாக்கியம்போல, திருக்குறளைப்போல ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி‘ என்று கூறிவிடுகிறார்.
இறைவன் திருப்பெயரை ஓயாமற் சொல்வதன் நோக்கம் என்ன? ஐந்தெழுத்தே ஆயினும் அதற்கு எவ்வாறு இவ்வளவு சக்தி வந்தது என்ற வினாவை மனிதன் கேட்கத் தொடங்கினான். இந்த நிலையில் ஒலிகளைப்பற்றியும் அவற்றின் ஆற்றல்களைப்பற்றியும் அவன் அறிந்திருந்த பல செய்திகள் அவனுக்கு உதவி புரிந்தன. ஒலிகள் பேராற்றல் வாய்ந்தவை. ஒவ்வொரு தனி எழுத்திற்கும் ஓர் ஒலி உண்டு. இரண்டு எழுத்துக்கள் சேரும்பொழுது ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள அதிர்வுகள் (frequency) ஒன்று கூடுகின்றன. இதிலிருந்து மூன்றாவதாக ஓர் அதிர்வு தோன்றுகிறது. அந்த மூன்றாவது அதிர்வு, இரண்டு எழுத்துக்களின் தனித்தனி அதிர்வுகளைவிட அதிகச் சக்தி வாய்ந்தது. அதேபோல, ஐந்தெழுத்தின் சேர்க்கையில் தோன்றும் ஒலி அலைகள், மாபெரும் சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன என்பதை நம்முன்னோர் கண்டனர். எழுத்துக்களின் வைப்பு முறையை மாற்றுவதால் புதிய புதிய ஆற்றலைப் பெற முடியும் என்ற நுணுக்கத்தையும் நம் முன்னோர் என்றோ அறிந்திருந்தனர். ‘நமசிவாய‘ என்ற எழுத்துக்களின் சேர்க்கையை ஸ்தூல பஞ்சாட்சரம் என்றும்,. ‘சிவாயநம‘ என்று கூறுவதைச் சூக்கும பஞ்சாட்சரம் என்றும், ‘சிவாயசிவ‘ என்பதை அதிசூக்கும பஞ்சாட்சரம் என்றும், பிரித்துக் கூறியுள்ளனர். இவ்வாறு செய்வதால் இவை ஒன்றைவிட ஒன்று ஆற்றல் மிகுந்து விளங்குகின்றன என்பதையும் அவர்கள் கண்டனர். என்றாலும் அவரவர்கள் பக்குவநிலைக்கு ஏற்ப, படிப்படியாக இந்த முறையைக் கையாளவேண்டுவதே தவிரத் திடீரென்று இரண்டாவது மூன்றாவது நிலைகளுக்குப் போவது சரியில்லை என்றும் பெரியோர் கூறியுள்ளனர். எட்டெழுத்து மந்திரம், ஆறெழுத்து மந்திரம் ஆகியவற்றிற்கும் இதுபோன்ற ஆற்றல் உண்டு என்பதை அறிதல் வேண்டும். எனவே, இம்மந்திரங்களை ஓயாது திரும்பத் திரும்பச் சொல்வதால் அவற்றில் தோன்றும் அதிர்வுகள் ஒன்றுதிரண்டு நம் வினையை அழிக்கின்றன. இதனையே அடிகளார் ‘சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை, முந்தை வினைமுழுவதும் ஓய உரைப்பன் யான்‘ என்று பேசுகின்றார். இங்குச் சிவபுராணம் என்றது இறைவனுடைய பல்வேறு பெயர்களையே ஆகும்

திருச்சிற்றம்பலம்

எறிபத்த நாயனார்

Standard
எறிபத்த நாயனார் / குரு பூசை மாசி – ஹஸ்தம்
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் – திருத்தொண்டத்தொகை
(கையிலிருந்த மழுவாயுதத்தால் சிவனடியார்களின் பகைவரைக்(பட்டத்து யானையை) கொன்று சைவத்தை வளர்த்தவர்.)

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் – திருத்தொண்டத்தொகை

 
சோழர்களின் தலைநகரங்களில் ஒன்று கருவூர். இத்தலத்தில் ஆனிலையப்பர் எழுந்தருளியுள்ளார். இவ்வூரில் பிறந்தவர் எறிபத்தர். அடியார்களுக்கு வரும் துன்பத்தை நீக்குவதில் சிங்கம் போன்றவர். கையில் மழு ஏந்தியவர். இந்நகரில் சிவகாமியாண்டார் என்னும் தொண்டர் திருமாலைப் பணிபுரிந்து வந்தார். ஒரு நாள் நந்தவனத்தில் மலர் பறித்துக் கொண்டு வந்தார். வழியில் புகழ்ச்சோழரின் பட்டத்துயானை பூக்கூடையைப் பறித்து கீழே எறிந்து. தொண்டர் மூப்பினால் தளர்ந்து கீழே விழுந்தார். சிவதா! சிவதா! என அழுது முறையிட்டார். 
 

அங்கே வந்த எறிபத்தர் யானையையும், பாகரையும் கொன்று வீழ்த்தினார். பிறர் இதனை அரசரிடம் அறிவித்தனர். அரசர் கோபம் கொண்டு விரைந்தார். அடியவர் நிற்கக் கண்டு அடியார் தவறு செய்யார் என எண்ணினார். யானை செய்த குற்றத்திற்கு அதனையும் பாகரையும் கொன்றது போதுமோ? என்றார். அரசரிடம் நாயனார் நிகழ்ந்தது கூறினார். அரசர் இக்குற்றத்திற்காக என்னையும் கொல்ல வேண்டும் எனத் தன் உடை வாளைக் கொடுத்தார். வாளை வாங்காவிட்டால் அரசர் தம்மை மாய்த்துக் கொள்வாரென்று நாயனார் வாளை வாங்கினார். இவர்க்குத் தீங்கு நினைத்தேனே என்று நாயனார் தம்மை மாய்த்துக் கொள்ள முயன்றார். அரசர் அவர் கையைப் பற்றி நிறுத்தினார். இறைவன் திருவருளால் யானையும் பாகரும் உயிர் பெற்றனர். பூக் கூடையில் பூ நிறைந்தது. சிவகாமியாண்டார் முன்பு போல் பணி புரிந்தார். எறிபத்தர் சிவகணங்களுக்குத் தலைவராகும் பேறு பெற்றார்.