குருவிடம் சரணடைதல்

Standard

குருவிடம் சரணடைதல்

குரு என்பது தமிழ் சொல், குரு என்ற சொல்லுக்கு ஓளி என்பது பொருள். ஒளியற்ற தன்மை குருடு எனப்படும்.

அஞ்ஞானம் என்னும் இருளை அகற்றி, மெஞ்ஞானம் என்னும் ஒளியை ஏற்றி வைப்பவரே “குரு” எனப்படுவார்..
அஞ்ஞானம் என்பது என்ன? மெஞ்ஞானம் என்பது என்ன?
இறைவனை அறிய மறுப்பது, இறைவனை நம்பாதது அஞ்ஞானம்.
இறைவனை அறிய முற்படுவது,இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று நம்புவது மெஞ்ஞானம் எனப்படும்.

தாய் சொன்னால் தான் ஒரு குழந்தைக்கு தந்தை யார்? என்பது தெரிவது போல், குருவின் மூலமாகத்தான் ஒரு சாதகன் இறைவனை அறிய முடியும், உணர முடியும். அத்தனை முக்கியமானவர் குரு. குருவிற்கு இந்து சமயம் மிக உயர்ந்த இடத்தை வழங்கியுள்ளது. குருவின் சொல்லைத் தட்டுபவன் நரகம் எய்துவான் என்றும் இந்து மதம் கூறுகிறது.

இதுகாச காலத்தில் பஞ்சபாண்டவர்களும், கெளவர்களும் துரோணாச்சாரைக் குருவாகக் கொண்டு சகல கலைகளையும் கற்றார்கள், இருப்பினும் தருமத்தைக் கடைப்பிடித்த பாண்டவர்கள் பக்கம் வெற்றி கண்டது. துரோணரை மானசீகமாகக் குருவாகக் கொண்டுதினமும் சகல கலைகளும் கற்றான் ஏகலைவன் அவனும் சிறந்து விளங்கினான். எனவே ஒருவன் குருவை நம்பி, அவரிடம் சரணாகதி அடைந்து ஒன்றைக்கற்றுக்கொண்டால் சிறந்து விளங்குவான் என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை.
இதில் ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால் நமக்கு கிடைக்கும் குரு உண்மையான குருவாக இருக்க வேண்டும். இதில் உண்மைக்குரு, போலிக்குரு என உண்டா? என்றால் கண்டிப்பாக உண்டு என்ற பதில்தான் கிடைக்கும். இரவு, பகல், இன்பம் – துன்பம், இனிப்பு – கசப்பு என்பது போல் உண்மை என்று உண்டெனில் போலி என்று ஒன்று இருக்கத்தானே செய்யும்.
உண்மையான குருவைத் தேடி அவரிடம் நாம் யோகம் பயில வேண்டும். போலிக் குருவை தங்களுக்கு வழிகாட்டியாக கொண்டவர்கள் பெருந்துன்பம்அடைவர். போலிக்குருவின் தன்மையை திருமூலர்:
“குருட்டினை நீக்கும் குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினை கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குழியினில் விழுந்த வாறே.” என்று தன்னுடைய திரு மந்திரத்தில் விளக்கியுள்ளார்.
குருடன் ஒருவன் எப்படி இன்னொரு குருடனுக்கு வழிகாட்ட முடியும்?
குருட்டாம் போக்கில் நடந்தால் இருவரும் குழியில் விழுந்து இடர்பட வேண்டியதுதான்.
எனவே , உண்மைக்குருவை தேர்ந்தெடுத்து அவரிடம் யோகம் பயிலுங்கள். அவர்வழி நடக்க பயில வேண்டும்.
குடிமக்கள் செய்யும் பாவம் அரசனைச் சேரும், மனைவி செய்யும் பாவம் கணவனைச் சேரும், சீடன் செய்யும் பாவம் குருவைச் சேரும். எனவே நல் சீடன் பாவம் செய்யக்கூடாது. குரு மிகவும் மேன்மையானவர், அதனால் தான் அவரை மாதா, பிதாவிற்கு அடுத்த நிலையில் வைத்தார்கள்.தெய்வத்திற்கு அடுத்த ஸ்தானத்தை குருவிற்கு வழங்கினார்கள் பெர்யோர்கள்.தன்னிடம் பயிலும் சீடனை குரு யோக்கியனாக ஆக்க வில்லை யெனில், அவன் செய்யும் பாவங்கள் யாவும் குருவிற்கே சென்றடையும் என்கிறது சாஸ்திரங்கள்.
சீடன் ஒருவன் குருவிடம் பயிலும் போது, அவன் குருவிற்கு வழங்கும் சன்மானம் குருதட்சனை எனப்படும், இதனையே உபநிஷத்தில் குருதட்சணை பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.
தட்சணை என்றால் என்ன? நாம் ஒருவருக்கு ஒன்றைக் கொடுக்காமல், அவரிடமிருந்து எந்த பிரயோஜனத்தையும் அடைந்து விட முடியாது. எந்தப் பொருளானாலும் அதற்கு விலை கொடுத்து வாங்கினால் தான் அது நம்மிடம் நிலைத்து நிற்கும். குரு தான் கற்றுக் கொடுத்த கலைக்காக மாணவன் – சீடன் அவருக்கு கொடுக்கும் காணிக்கையே குரு தட்சணை எனப்படும். இதனையே உபநிஷத்தில் ஒரு குருவானவர் சிஷ்யன் படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது அவனுக்கு பண்ணும் உபதேசம் குறித்தும் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. அதில்
உண்மை பேசு, தர்மத்தின் படி நட, தெய்வத்திற்கு பிதாவுக்கு குருவிற்கு செய்ய வேண்டிய நற்செயல்களை ஒரு நாளும் விடாதே. என்று விளக்கியுள்ளது.
நல்ல குருவானவர் ஒரு மாணவனுக்குவாய்க்கப் பெற்றால் அது அவன் செய்த பூர்வ புண்ணிய செயலாகும்.
ஆன்மீகத்தில் தங்களுக்கு சரியான உண்மையான குரு வாய்க்கப் பெற்றால் பரிணாமத்தின் படி அவர் அடிதொட்டு படி ஏறி உயரே பயணிக்க வேண்டும்.பாதையில் மேலிருந்து கீழ், கீழ் இருந்து மேல் என்று ஒன்று இருப்பதில்லை. அது தொடங்குபவரைப் பொறுத்தது. ஒரு பாதை தொடக்கமாக இருப்பதும், முடிவாக இருப்பதும் உங்களைப் பொறுத்ததே.
நீங்கள் குருவை எப்படி கண்டு உணர்ந்தீர்களோ, அவர்இறுதிவரை அப்படியே இருப்பார், மாற்றம் என்பது உங்களிலேயே தோன்றும். இந்த மாற்றம் முன்னேற்றப் பாதையில் இருக்க வேண்டும். இந்த பயணத்தில் முடிவுகளை நீங்களே எடுக்க முடியாது. இது இருவர் சார்ந்து பயணிக்கும் மூன்றாவது ஒன்றினைத் தேடி பயணிக்கும் பயணம். இதில் முடிவுகளை குருவிடம்விட்டு சரணாகதி அடைவதே நீங்கள் செய்ய வேண்டியது.
சரணாகதி தத்துவம் என்பது என்ன? தன் உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டு இறைவா, என் செயலாவது யாதொன்றும் இல்லை, எல்லாம் உன் செயலே என்று இருப்பது தான் சரணாகதி எனப்படும்.
மனிதன் எப்பொழுது இறைவனை சரணடைகிறான். தன்னால் ஆன முயற்சி களை எல்லாம் செய்து விட்டு, தன்னால் இனி ஒன்றும் செய்ய இயலாது , இனி இறைவன் தான் என்னைக் காப்பாற்ற வேண்டம்என்று நினைக்கும் போதுதான் மனிதன் இறைவனை சரணடைகிறான்.
இதனை விளக்கும் முகமாகத்தான் மகாபாரத்தில் பாஞ்சாலியும், கஜேந்திரன் என்ற யானையும், தங்களால் ஒன்றும் முடியாது என உணர்ந்த பின் கண்ணா- ஆதிமூலா என்று இறைவனிடம் சரணாகதி அடைந்ததை காட்டுகிறது.
எனவே, குருவிடம் தன்னை முழுமையாக ஒப்படைப்பவர்களை அந்த குரு உலக ஆசைகளிலிருந்து விடுவித்து அவருக்கு பிரம்மத்தை அறிய வழிகாட்டுவார் என்பது உண்மையாகும்.
திருச்சிற்றம்பலம் …. ஓம் நமச்சிவாயம்
மேலும்பல ஆன்மிகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com